வேடசந்துார், : குடகனாறு அணைப்பகுதியில் வைக்கப்பட்ட ஐந்தாயிரம் தேக்கு மரக்கன்றுகள் நன்கு வளர்ந்த நிலையில் போதிய மழை இல்லாததால் காய்ந்து வருகிறது. தேக்கு மர கன்றுகள் வீணாவதற்குள் அணைப்பகுதியில் உள்ள தண்ணீரை மர கன்றுகளுக்கு பாய்ச்ச வனத்துறை முன் வர வேண்டும்.வேடசந்துார் அழகாபுரியில் குடகணாறு ஆற்றின் குறுக்கே குடகுணாறு அணை கட்டப்பட்டுள்ளது. 27 அடி கொண்ட இந்த அணையில் 25.2 அடி தண்ணீர் உள்ள நிலையில் தற்போது பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அணையின் முன் பகுதியில் அழகாபுரி - வேடசந்துார் மெயின் ரோட்டில் இருந்து அணை பகுதி வரை உள்ள காலி இடத்தில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை சார்பில் 5 ஆயிரம் தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்டன. வாகனங்களில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி பராமரிக்கப்பட்டது.காய்ந்து வரும் மரங்களை வனத்துறையினர் தண்ணீர் ஊற்றி பாதுகாக்க முன்வராத நிலையில் 90 சதவீத மரங்களில் இலைகள் உதிர்ந்து விட்டன. மரங்கள் காய்ந்து கருகுவதற்குள் தேக்கு மரக்கன்றுகளுக்கு அழகாபுரி அணைக்கட்டு பகுதியில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீரை கொண்டு வந்து பாய்ச்சி மரக்கன்றுகளை பாதுகாக்க வனத்துறை முன் வர வேண்டும் . ஓராண்டு பாதுகாத்தால் போதும்
பி.முத்துக்கிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், அழகாபுரி: அழகாபுரி குடகணாறு அணையின் முன்புற பகுதியில் உள்ள காலி இடத்தில் வனத்துறை சார்பில் ஐந்தாயிரம் தேக்கு மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்து வந்தனர். நான்கு, ஐந்து ஆண்டுகள் ஆகும் நிலையில் நடப்பு ஆண்டில் போதிய பருவ மழை இல்லாததால் தேக்கு மரக்கன்றுகள் காய்கின்றன. ஒரு ஆண்டுக்கு தண்ணீரை ஊற்றி பாதுகாத்து விட்டால் அடுத்த ஆண்டு கண்டிப்பாக மழை பெய்து விடும். இவ்வளவு துாரம் வளர்த்த மரங்கள் காய்வது வேதனை அளிக்கிறது.விரைவில் காயக்கூடிய இந்த மரங்களுக்கு அணை நீரை பாய்ச்ச முன் வர வேண்டும். பார்த்து வியந்தது உண்டு
எல்.ரங்கராஜ், சமூக ஆர்வலர் : பாறைப்பட்டி, கூம்பூர்: அணையின் முன் பகுதியில் ஐந்தாயிரம் மரக்கன்றுகள் வளர்ந்து வந்தன. மெயின் ரோட்டில் செல்வோர் கூட இது என்ன தேக்கு மர கன்றுகளா என நின்று பார்த்து சென்றது உண்டு. அப்படி அழகாய், அருமையாய் வளர்ந்த தேக்கு மரக்கன்றுகள் இன்று ரோட்டோரம் காய்ந்து கருகுவது இவ்வழியில் செல்வோரை வருத்தம் அடைய செய்துள்ளது. அழகாபுரி அணையில் போதிய தண்ணீர் இருக்கும் நிலையில் மரக்கன்றுகளுக்கு தேவையான தண்ணீரை மின் மோட்டார் கொண்டு பாய்ச்ச வனத்துறை நிர்வாகம் முன் வர வேண்டும். கலெக்டரிம் முறையீடு
கே.பொம்முசாமி, குடகனாறு பாதுகாப்பு சங்க செயலாளர், வேடசந்துார்: அணை பகுதியில் ஐயாயிரம் மனக்கன்றுகளை நட்டு பராமரிக்க வனத்துறை சார்பில் கண்டிப்பாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கும். போதிய செலவுகளை செய்து தான் இவ்வளவு துாரம் பராமரித்து வந்துள்ளனர். தற்போது போதிய மழை இல்லாத நிலையில் மரக்கன்றுகளை பராமரிக்காததால் கன்றுகள் காய்கின்றன. இந்த மரக்கன்றுகளை பராமரிக்க அரசு நிதி ஒதுக்கீடு இருக்கும். அதை கொண்டாவது இந்த கன்றுகளை பராமரிக்கலாமே. குறைதீர் முகாம் அன்று கலெக்டரிடம் தேக்கு மர கன்றுகளை பராமரிக்க கோரி மனு அளிக்கப்படும் என்றார்.