மலைப்பகுதியில் பழுதாகும் அரசு பஸ்கள்
பயணிகள் பரிதவிப்புதாண்டிக்குடி: தாண்டிக்குடி மலைப்பகுதியில் இயக்கப்படும் அரசு பஸ்கள் பாதி வழியில் பழுதாகி டிரிப் கட் செய்ததால் பயணிகள் அவதியடைந்தனர். தாண்டிக்குடி, ஆடலுார், பன்றிமலை, பண்ணைக்காடு,கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிக்கு வத்தலக்குண்டு அரசு கிளை மூலம் ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகிறது. இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் காலாவதியான நிலையிலும், ஓட்டை உடைசலுடன், பாதி வழியில் பழுதாகி பயணிகள் பரிதவிக்கவிடும் நிலை உள்ளது. பொங்கல் தொடர் விடுமுறையால் சென்னை உள்ளிட்ட பிற நகரங்களுக்கு செல்ல சிறப்பு பஸ்களாக மலைப்பகுதியில் இயக்கப்பட்ட புதிய பஸ்களை திருப்பிவிடப்பட்டன. இந்த ஓட்டை உடைசல் பஸ்கள் இரு தினங்களாக ஆங்காங்கே பழுதாகி நிற்க டிரிப் கட்டாகின. இதுபோன்ற நிலையால் மலைப்பகுதியினர் அவதிக்குள்ளாகினர். நேற்று தாண்டிக்குடி மலைப்பகுதியில் இயக்கப்பட்ட 3 பஸ்கள் பாதி வழியில் பழுதாகி நின்றதால் பயணிகள் பரிதவித்தனர். மலைப்பகுதிக்கு இயக்கப்படும் பழுதான பஸ்களை மாற்றி நல்ல நிலையில் உள்ள பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.