உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோடைகால தற்காலிக கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு

கோடைகால தற்காலிக கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய ரோடுகளில், கோடை காலத்தில் பல்வேறு தற்காலிக கடைகள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக, கோடை காலத்தில், பல வகையான பழச்சாறுகள் விற்பனை செய்ய 100க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். பிற பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் நிலையாக ஓரிடத்தில் அமைப்பதில்லை. மரத்தடிகளில், தற்காலிகமாக தள்ளுவண்டிகளை வைத்து பழச்சாறு விற்பனை செய்கின்றனர்.இதில், நகரம் தவிர்த்து கிராமப்புற ரோடுகளில், செயல்படும் பழச்சாறு விற்பனை கடைகளில், 18 வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் பணி செய்கின்றனர். பிற மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால் அவர்களிடம் எந்த விபரமும் சேகரிக்க முடிவதில்லை. பழநி, கொடைக்கானல் போன்ற இடங்களில் வடமாநில குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கிறது. அதேபோல் வேடசந்துார், வடமதுரை பகுதிகளில் அதிகளவில் உள்ள மில்களில் ஆய்வு செய்ய வேண்டிய தேவையும் இருக்கிறது.மேலும், குடும்பங்களின் பொருளாதார நிலைமை மோசமடைந்து, குழந்தைகள் வேலைக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். சில குழந்தைகள் நாள் முழுவதும் வேலை செய்கிறார்கள், இதனால் அவர்களின் கல்வி மற்றும் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.குழந்தைத் தொழிலாளர் சட்டங்கள் சில நேரங்களில் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இது குறித்து நேரடியாக கண்காணித்து குழந்தை தொழிலாளர்களை மீட்க வேண்டும். குறிப்பாக, கோடை கால சீசனில், ரோட்டோர கடைகளில் நிலவும் விதிமீறல்கள் குறித்தும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் வாயிலாகவும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ