வடமதுரையில் மீண்டும் பலத்த வெடி சத்தம்
வடமதுரை; திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, எரியோடு, திண்டுக்கல், வேடசந்துார் பகுதிகளில் நேற்று காலை 11:21 மணிக்கு பலத்த வெடிச்சத்தம் கேட்டது. இதை தொடர்ந்து பல இடங்களில் நிலஅதிர்வும் உணரப்பட்டது. வடமதுரை, எரியோடு, வேடசந்துார், சாணார்பட்டி பகுதியில் சில வார இடைவெளியில் பலத்த வெடிச்சத்தம் கேட்பது வாடிக்கையாக உள்ளது. ஒவ்வொரு முறையும் இந்த வெடிச்சத்தம் 30 கி.மீ., சுற்றளவு பகுதிகளில் கேட்கிறது. நேற்றும் இச்சத்தம் கேட்டது. அப்போது நில அதிர்வும் உருவானது. வெடிச்சத்தம் எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து இதுவரை அரசு சார்பில் எந்த விளக்கமும் தரப்படாததால் மக்களிடம் குழப்பம் நிலவுகிறது.