தாண்டிக்குடி: மலைப்பகுதியில் அதிகரித்து வரும் மொசைக் வைரஸ் பாதிப்பால் சவ்சவ் உள்ளிட்ட காய்கறிவிவசாயம் அடியோடு பாதித்து வருகிறது.துவக்கத்தில் தாண்டிக்குடி,சிறுமலை, ஆடலுார், பன்றிமலை உள்ளிட்ட மலைப்பகுதியில் காய்கறி விவசாயம் வாழ்வாதாரமாக விளங்கியது. 15 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயத்தில் மொசைக் வைரஸ் பாதிப்பு தொடர்ந்தது .மேலும் காட்டுப்பன்றி, வனவிலங்கு நடமாட்டத்தால் விவசாய பரப்பு சுருங்கி வருகிறது. பொருளாதார ரீதியாக ஒத்துழைத்த சவ்சவ் விவசாயம் இவ் வைரஸ் பாதிப்பால் வெகுவாக பாதித்து வருவது குறித்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தோட்டக்கலைத்துறையிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. வெறும் கண்துடைப்பாக கவர்ச்சி பொறிகள் , சில ரசாயன பூச்சி மருந்துக்களை பரிந்துரைத்து அறிவுறுத்தியதோடு சரி .இதை கட்டுப்படுத்தும் திட்டத்தை தோட்டக்கலைத்துறை முழுமையாக செயல்படுத்தவில்லை. நாளடைவில் இதன் பாதிப்பு பீன்ஸ், அவரை உள்ளிட்ட பந்தல் காய்கறி விவசாயத்திலும் தொடர துவங்கி உள்ளது. இதற்கு காரணம் மரபணு மாற்றப்பட்ட விதைகள் வரவே என விவசாயிகள் கூறுகின்றனர். துவக்கத்தில் சவ்சவ் கொடிகளில் வைரஸ் பாதிப்பு நீடித்ததே இதற்கு காரணம் என்கின்றனர். இதை விவசாயிகள் மஞ்சள் நோய் தாக்குதல் என கூறி வருகின்றனர். துவக்கத்தில் பசுமையாக காட்சியளிக்கும் கொடிகள் காய்ப்பு தன்மை வரும் நிலையில் இலைகளில் மஞ்சள் புள்ளியாக மாறி அவற்றை மகசூல் இலக்கச் செய்கிறது. தொடர்ந்து அருகில் உள்ள காய்கறி பயிர்களிலும் வைரஸ் பாதிப்பு தொடர்வதால் காய்கறி பயிர்களின் மகசூல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தீர்வு காணலாமே
சுமன், விவசாயி, தாண்டிக்குடி: தங்களின் வாழ்வாதாரமான சவ்சவ் விவசாயம் மொசைக் வைரஸ் பாதிப்பு ,காட்டுப்பன்றி வரவால் அடியோடு பாதித்துள்ளது. இதை கட்டுப்படுத்த கோரி தோட்டக்கலைத்துறையிடம் கூறியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் விவசாய பரப்பு சுருங்கி விட்டது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தோட்டக்கலைத் துறை , தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தினர் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பு மருந்து உற்பத்தி செய்யுங்க
விவேகானந்தன். விவசாயி, மன்னவனுார் : சவ்சவ்வை தொடர்ந்து தற்போது பீன்ஸ், அவரை உள்ளிட்ட காய்கறி பயிர்களிலும் வைரஸ் பாதிப்பு தொடர்கிறது. தோட்டக்கலை துறைத்துறையினர் கூறும் கட்டுப்பாடுகளினால் இவ்வைரஸ் பாதிப்பு குறைந்ததாக தெரியவில்லை. தோட்டக்கலைத்துறையினர் வைரஸ் பாதிப்பு வீரியம் மலைப்பகுதியில் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த துரித கதியில் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்ய வேண்டும். தீர்வு
மலைப்பகுதியில் தோட்டக்கலை துறை , தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையங்கள் செயல்படுகின்றன. சவ்சவ், பீன்ஸ், அவரை உள்ளிட்ட பயிர்களில் பரவும் வைரஸ் பாதிப்பு குறித்து தனி ஆராய்ச்சி குழுவை நியமித்து இதற்கான கட்டுப்பாடு மருந்துகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். பாரம்பரியமாக நடவு செய்யப்பட்ட விதைகளை தேர்வு செய்து அதன் மூலம் நேர்த்தி செய்யப்பட்ட நோய் தாக்குதலற்ற விதைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.வைரஸ் பாதிப்பிற்கு பின் இதை கட்டுப்படுத்தும் கவர்ச்சி பொறிகள் , இயற்கை பூச்சிகளை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுத்தால் இதை கட்டுப்படுத்த முடியும்.