கொடை கோக்கர்ஸ் வாக்கில் தடுமாறும் சுற்றுலா பயணிகள் துாக்கத்தில் நகராட்சி அதிகாரிகள்
கொடைக்கானல்: - கொடைக்கானல் கோக்கர்ஸ்வாக்கில் முழுமை பெறாத வளர்ச்சி பணிகளால் பயணிகள் தடுமாறுகின்றனர்.கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் 2024 ல் ரூ.3.16 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவங்கின. இப்பணிகள் முழுமை பெறாது தரைப்பகுதியில் பதிக்கப்பட்ட கற்கள் ஒழுங்கற்று இடைவெளியுடன் இருப்பது, தரைப்பகுதியை பார்வையிடும் தொலைநோக்கி மைய பகுதியில் அமைத்த கற்கள் சிதறிய நிலை, முழுமை பெறாத வேலி, டிக்கெட் வழங்கும் நுழைவு பகுதியில் பல்லாங்குழி பள்ளங்கள் என இயற்கை அழகை ரசிக்க வருகை தரும் பயணிகள் அரைகுறை பணிகளால் நாள்தோறும் தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர். அகற்றப்படாத கட்டுமான குவியல் என பயணிகள் நொந்து கொள்ளும் நிலையில் கோக்கர்ஸ்வாக் உள்ளது. சீசன் நிறைவடைந்து ஒரு வாரமான நிலையில் நகராட்சி அதிகாரிகள் மே 31க்குள் பணிகள் நிறைவுறும் என கூறியிருந்தனர். இருந்த போதும் எவ்வித பணிகளும் நடக்காது பழைய நிலை நீடிக்கிறது. நாள்தோறும் இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தடுமாறி விழும் நிலையே காண முடிகிறது. இனியாவது பயணிகளின் பாதுகாப்பு கருதி பணிகளை துரிதபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.