ஆக்கிரமிப்புகளால் குறுகிய தெருக்கள்; அவசர நேரங்களில் திண்டாடும் அவலம்
பொதுவாக ரோட்டோரங்களில் வணிக நிறுவனங்கள் நடத்துவோர் ரோடு விளிம்பு வரையிலும், சில இடங்களில் ரோடு விளிம்பை தாண்டி தார் ரோட்டிலும் பொது நலனுக்கு இடையூறு செய்யும் வகையில் நிழற்கூரைகளை அமைத்திருப்பதை பார்க்கலாம். இதில் அரசு துறை அதிகாரிகளின் கண்காணிப்பும், கண்டிப்பான நடவடிக்கையும் இல்லாததால் இதுபோன்ற அவல நிலை நீடிக்கிறது.பல இடங்களில் சிக்கல் அதிகமான பின்னர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கும். தொடர் கண்காணிப்பு, கண்டிப்பு இல்லாததால் சில மாதங்களில் படிப்படியாக பழைய ஆக்கிரமிப்பு நிலைக்கு ஆக்கிரமிப்பாளர்கள் வந்துவிடுகின்றனர். அடுத்து பல ஆண்டுகள் பின் நடக்கும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி வரை இவர்களது ஆக்கிரமிப்பிற்கு ஆயுள் கெட்டியாகவே இருக்கும்.இதுஒருபுறமிருக்க தற்போது குடியிருப்புகள் இருக்கும் தெருக்களில் வீடுகள் கட்டும் பலரும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிறிது உயரமாகவே கட்டுகின்றனர். தங்களது இடத்திற்குள் வீடுகளை அமைக்கும் இவர்கள் பொதுப்பாதையை ஆக்கிரமிப்பு திண்ணை, வாகனங்களை ஏற்ற, இறக்க சாய்வுத்தளம் என அமைக்கின்றனர். இதனால் தெருக்களில் இருக்கும் பொதுப்பாதையின் அகலம் குறைகிறது. சில தெருக்களில் அவசரத்திற்கு கார், ஆட்டோ, தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து செல்ல முடியாமல் பரிதவிக்கும் நிலை ஏற்படுகிறது.