| ADDED : பிப் 06, 2025 05:59 AM
ஒட்டன்சத்திரம்; திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல ஓட்டல்கள், டீக்கடைகளில் திறந்தவெளியில் பலகாரங்களை விற்பதால் ஈக்கள் மொய்த்து உடல் நலனுக்கு தீங்கை விளைவிக்கிறது. உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் ஏராளமான ஓட்டல்கள் டீக்கடைகள் பேக்கரிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கடைகளில் வடை, பஜ்ஜி உள்ளிட்ட பலகாரங்கள் செய்வதற்கு ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை பலமுறை பயன்படுத்துவதாலும், தயார் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் சுகாதாரமின்றி திறந்த வெளியில் வைத்து விற்பதாலும் வாங்கி உண்பவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகிறது. சில கடைகளில் பலகாரங்கள் தயாரிக்கும் எண்ணெய் கருப்பு நிறமாக மாறும் வரை மாற்றப்படாமல் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெய்களில் தயாரிக்கப்படும் வடை, பஜ்ஜி,போண்டா, சிக்கன், மட்டன், மீன்களை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு ஏராளமான நோய்கள் ஏற்படுகிறது. எண்ணெயை சூடாக்கி மீண்டும் பயன்படுத்துவதால் புற்றுநோய், இதய பாதிப்பு, நெஞ்செரிச்சல், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுகின்றன. இந்த நோய்கள் வராமல் இருக்க ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர். இவ்வாறு செய்யப்படும் உணவுப் பொருட்கள் பல கடைகளில் பாதுகாப்பின்றி திறந்தவெளியில் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஈக்கள் மொய்க்கும் இவற்றை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகிறது. உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.