உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி ஆர்.டி.ஓ., அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவு

பழநி ஆர்.டி.ஓ., அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவு

பழநி : பழநி சித்த மருத்துவக் கல்லுாரிக்கு இடம் வழங்கிய நில உரிமையாளர்களுக்கு நிலுவைத் தொகை தாமதமானதால் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்ற உத்தரவுப்படி வந்த ஊழியர்கள் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் திரும்பினர். பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் கட்டப்பட உள்ள சித்த மருத்துவ கல்லுாரிக்கு தட்டாங்குளம் அருகே உள்ள சித்தா நகர் பகுதியில் 40 ஏக்கர் நிலத்தை 46 நபர்கள் 1988ல் வழங்கினர். இந்த இடத்திற்கான விலை நிர்ணயம் செய்ய பழநி சார்பு நீதிமன்றத்தில் 1991ல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 2009 ல்ஒரு சென்ட் நிலத்திற்கு ரூ.4000 நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்கான தொகையில் 50 சதவீதத்தை உடனடியாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். சார்பு நீதிமன்ற உத்தரவை 2011 ல் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இதை தொடர்ந்து 50சதவீத இழப்பீடுத் தொகை நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள நிலுவைத் தொகை வழங்க அரசு தாமதம் செய்தது. இதுகுறித்த வழக்கை விசாரித்த முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி ரேணுகாதேவி, பழநி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி நேற்று (செப்.23 ) நீதிமன்ற ஊழியர்கள் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு ஜப்தி செய்ய வந்தனர். அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் கால அவகாசம் வழங்க திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ