நெடுஞ்சாலை தடுப்பு சுவர் விளம்பரங்களால் அலங்கோலம்: அரசியல் கட்சிகள் செயலால் மக்கள் அதிருப்தி
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போதே அரசியல் கட்சியினர் பல்வேறு பொதுகூட்டங்கள், மாநாடுகள், அரசியல் தலைவர்களின் வருகை என பல்வேறு விஷயங்களுக்காக பிளக்ஸ், பேனர் தொடங்கி சுவர் விளம்பரம் வரை விளம்பரம் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அரசு சுவர்கள், நெடுஞ்சாலை தடுப்புச்சுவர்கள் என பாரபட்சமின்றி போட்டி போட்டு இடம் பிடித்து விளம்பரம் எழுதி அலங்கோலப்படுத்தி வருகின்றனர். இதே போல் பயணியர் நிழற் குடைகளில் விதிமுறை மீறி போஸ்டர்கள் ஒட்டுகின்றனர். ரூ.பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்புச்சுவர்கள், பயணியர் நிழகுடைகள் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. மாவட்டத்தில் பழநி, கொடைக்கானல் என பல்லாயிரக்காண வாகனங்கள் வந்து செல்லும் நிலையில் விதிமுறை மீறி சுவர்களில் எழுதப்பட்டுள்ள விளம்பரங்களால் வாகன ஓட்டுநர்களுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அரசு சுவர்களில் விதிமுறை மீறி ஒட்டப்பட்டுள்ள விளம்பர போஸ்டர்கள், சுவர் விளம்பரங்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விளம்பர போஸ்டர்களை அகற்றி வெள்ளை வர்ணம் பூச வேண்டும். இதற்கான தொகையை விளம்பரம் செய்துள்ளவர்களிடமே வசூலிக்க வேண்டும்.