குடியிருப்பு மேல் உயரழுத்த மின்கம்பிகள் அல்லாடும் புதுப்பட்டி ஊராட்சி மக்கள்
நத்தம் : நத்தம் புதுப்பட்டியில் குடியிருப்புகள் மேல் செல்லும் உயரழுத்த மின்கம்பியால் அச்சம், தார் சாலை இன்றி மண் ரோடால் அவதி, அரசு பஸ் வசதி இல்லை,திறந்தவெளி சாக்கடையால் கொசு உற்பத்தி என பல்வேறு பிரச்னைகளுடன் நத்தம் புதுப்பட்டி ஊராட்சி மக்கள் அல்லாடுகின்றனர்.இவ் ஊராட்சியில் குடியிருப்புகளுக்கு மேல் உயர் அழுத்த மின்கம்பிகள் பாதுகாப்பற்ற நிலையில் செல்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிப்பினை சந்திக்கின்றனர். இதனை மாற்ற கோரியும் நடவடிக்கை இல்லை. ஆத்திபட்டி ,குட்டூருக்கு அரசு பஸ் வசதி இல்லை, ஆட்டோவை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். பல நுாறு குடும்பங்கள் உள்ள இந்த கிராமங்களுக்கு அரசு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.சாக்கடைகளால் சுகாதாரக் கேடு, கொசு தொல்லையால் மக்கள் அவதிப்படுகின்றனர். திருவிழா நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த கலையரங்கம் வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரியும் நிலுவையில் உள்ளது. களத்து வீடு பகுதியில் வசிக்கும் 30க்கு மேற்பட்ட குடும்பங்கள் சாலை வசதி இன்றி மண் பாதையால் சிரமம் அடைகின்றனர்.மதுரை துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை புதிதாக அமைக்கப்பட்டு அது புதுப்பட்டி ஊராட்சி கிராமங்களுக்குள் செல்கிறது. இந்த சாலையில் இரவு நேரங்களில் இரவு 8:00 மணி முதல் மறுநாள் காலை 4:00 மணி வரை மட்டுமே விளக்குகள் எரிகிறது. இதனால் இருளில் திருட்டுச் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. இருள் சூழ்ந்து உள்ளதால் விபத்துக்களும் நடக்கிறது. மாலை 6:00 மணி முதல் காலை 6:00 மணி வரை விளக்குகள் எறிய தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்ற கேட்டால் பணம்
என்.வி. முருகன், டிரைவர் : குடியிருப்புகள் மேல் உயரழுத்த மின்கம்பிகள் செல்கிறது. மின்வாரிய அலுவலர்கள், ஊராட்சி நிர்வாகத்திற்கும் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. குடியிருப்பு பகுதி மேல் செல்லும் மின்கம்பிகளை மாற்றகோரினால் குடியிருப்பு உரிமையாளர்களிடம் பணம் கேட்கின்றனர். நோய் பரவும் அபாயம்
பி. பொன்னுத்தாயி, கூலித் தொழிலாளி: குடியிருப்பு பகுதிகளில் திறந்தவெளியில் சாக்கடைகள் செல்கின்றன. இதனால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. கொசு தொல்லைகளும் அதிகமாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள் குடிநீர் பைப்புகளை அமைத்துத் தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதாகும் தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும். தெருக்களில் கழிவுநீர்
செல்வம், ஓ.பி.எஸ்., அணி ஒன்றிய செயலாளர்: மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புதுப்பட்டி கிராமத்திற்கு வர 300 மீட்டர் தார் சாலை அமைத்தால் கிராம மக்கள் சென்று வர பயனுள்ளதாக இருக்கும். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புதுப்பட்டி வரும் சாலை பாதியிலே உள்ளதால் இந்த சாலையை புதுப்பட்டி வரை நீட்டித்து நத்தம் சாலையுடன் இணைக்கலாம். அப்போதுதான் பள்ளி மாணவர்கள் சென்று வர வசதியாக இருக்கும். சாக்கடைவசதி இல்லாததால் தெருக்களில் கழிவுநீர் பாய்கிறது. வசதிகளுக்கு தீர்வு
பழனியம்மாள் மகாலிங்கம், ஊராட்சி தலைவர், புதுப்பட்டி: ஊராட்சி உட்பட்ட கிராமங்களில் குடிநீர், தெருவிளக்கு, குப்பை மேலாண்மை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கிராம மக்கள் எந்த பிரச்னை சொன்னாலும் நிதி ஆதாரங்களுக்கு ஏற்ப உடனடியாக தீர்த்து வைக்கப்படுகிறது. மதுரை செங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு 300 மீட்டர் மட்டும் சர்வீஸ் ரோடு அமைத்தால் கிராம மக்கள் போக்குவரத்துக்கு ஏதுவாக இருக்கும். பலமுறை கோரிக்கை வைத்தும் தற்போது வரை நடவடிக்கை இல்லை. குடியிருப்பு மேல் செல்லும் உயரழுத்த மின்கம்பியை மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.