பழநி நகரில் பார்க்கிங் பிரச்னையால் பரிதவிக்கும் பொதுமக்கள்
பழநி : பழநி அடிவாரம், நகரபகுதிகளில் டூவீலர் , நான்கு சக்கர வாகனங்கள் பார்க்கிங் வசதி இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பழநி நகரில் முக்கிய வீதியில் ஆர்.எப் ரோடு, ஹெட் போஸ்ட் ஆபீஸ் ரோடு, காந்தி மார்க்கெட் ரோடு அருள்ஜோதி வீதி, திருவள்ளுவர் சாலை பகுதிகளில் முறையான பார்க்கிங் வசதி இல்லாததால் சாலைகளில் டூவீலர், நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். தாசில்தார் அலுவலக வளாகத்தில் ஒன்றிய அலுவலகம், கிளைச் சிறை, பத்திரப்பதிவு, கருவூலம், வேளாண்மை, பொதுப்பணித்துறை, புள்ளியியல் துறை, வனத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இங்கு முறையான பார்க்கிங் வசதிகள் இல்லை. இங்கு தினமும் பல்வேறு பணி நிமித்தமாக சுற்று கிராமங்களில் இருந்து நுற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் அங்கு வரும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். அடிவாரம் பகுதியில் அருள்ஜோதி வீதி, கிழக்கு கிரிவீதியில் மட்டுமே பார்க்கிங் வசதி உள்ளது. வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இங்கும் போதிய இடம் இல்லை. இதனால் அருள் ஜோதி வீதி, பூங்கா ரோடு ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி செல்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. டூவீலர்களால் நெரிசல் சீனிவாசன், ஓய்வு தனியார் நிறுவன அதிகாரி, தட்டான் குளம்: உழவர் சந்தை அருகே காலை நேரத்தில் டூவீலர்கள் ரோட்டில் நிறுத்தி வைக்கின்றனர். இதனால் காலை நேரத்தில் வங்கி அலுவலகம்,பள்ளி செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக காலதாமதம் ஏற்படுகிறது. காந்தி மார்க்கெட் ரோடு, ஆர்.எப். ரோடு பகுதிகளில் பகல் நேரங்களில் ரோடு இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் உள்ளது. சிரமத்தில் பொதுமக்கள் பாலசுப்பிரமணியன், ஓய்வு போலீஸ் அதிகாரி, தெற்கு அண்ணா நகர்: அடிவாரம் பகுதியில் அருள்ஜோதி வீதியில் வெளியூர் நபர்களின் வாகனங்களை ரோடு இருபுறமும் நிறுத்தி விட்டு செல்கின்றனர். போலீசார் அறிவிப்பு பலகை வைத்தபோதிலும் அதனை கண்டு கொள்வதில்லை போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்காத நிலையில் பொதுமக்கள் சிரமம் அடைவார். ஹெட் போஸ்ட் ஆபீஸ் ரோடு பகுதிகளில் டூவீலர்களை நிறுத்தி செல்கின்றனர். பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடில் அனைத்து வங்கிகளும் இயங்கி வருவதால் இங்கு வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சில நேரங்களில் அந்தப் பாதையில் ஆட்டோ கார்கள் செல்வதால் மேலும் நெரிசல் ஏற்படுகிறது.