| ADDED : டிச 05, 2025 05:28 AM
திண்டுக்கல்: ராமேஸ்வரம், - காசி ஆன்மிக யாத்திரைக்கு திண்டுக்கல்லில் இருந்து திண்டுக்கல், தேனி மாவட்ட மூத்த குடிமக்கள் பயணத்தை தொடங்கினர். தமிழக அரசு மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மிக பயணம் அறிவித்திருந்தது. அதன்படி திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த 60 முதல் 70 வயதுக்கு உட்பட்ட மூத்த குடிமக்கள் 30 பேர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலிலிருந்து காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலுக்கு நேற்று பயணம் மேற்கொண்டனர். திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே ஹிந்து சமய அறநிலையத் அலுவலகத்திலிருந்து வேன்கள் மூலம் பயணத்தை தொடங்கினர். இணை கமிஷ்னர் கார்த்திக், உதவி கமிஷ்னர் லட்சுமிமாலா தொடங்கி வைத்தனர். இவர்கள் ராமேஸ்வரம் சென்றடைந்து அங்கு தீர்த்தம் எடுத்து காசி சென்று அபிஷேகம் செய்கின்றனர். இதுபோல் கங்கை தீர்த்தம் எடுத்து வந்து ராமேஸ்வரத்தில் அபிஷேகம் செய்வர். நேற்று தொடங்கிய ஆன்மிக பயணம் டிசம்பர் 12 ல் நிறைவடைகிறது. 9 நாள் பயணத்திற்கு தேவையான போர்வை, சால்வை பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது. திண்டுக்கல்லில் நடந்த வழியனுப்பும் நிகழ்ச்சியில் தாடிக்கொம்பு பெருமாள் கோயில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் விக்னேஷ் பாலாஜி, சீனிவாச பெருமாள் கோயில் அறங்காவலர் ரமேஷ், தி.மு.க., மாநகர பொருளாளர் சரவணன் கலந்து கொண்டனர்.