மழைக்காலத்தில் கழிவுநீரால் நோய் தொற்று; பழநி நகராட்சி 29 வது வார்டு மக்கள் அவதி
பழநி: பழநி நகராட்சி 29 வது வார்டில் ஆண்டவன் பூங்கா ரோட்டில் மழைக்காலத்தில் தண்ணீர் விரைந்து வடிந்து செல்லும் வகையில் வடிகாலை சரி செய்வதோடு ஆக்கிரமிப்புகளை அகற்றி இருபுறமும் மரங்கள் நட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது சிங்கப்பெருமாள் கோனார் சந்து, பாரதி நகர், ராஜகுரு வீதி, சுபதேவ்வீதி, பொன்நகர், ஆண்டவர் பூங்கா ரோடு பகுதிகளில் உள்ளடக்கிய இந்த வார்டில் மழை பெய்யும் நேரங்களில் மழைநீருடன் கழிவு நீர் ஆண்டவன் பூங்கா ரோடு பகுதியில் செல்கிறது. இது விரைவில் வடிந்து செல்லாமல் தேங்கி சுகாதாரத் கேடை ஏற்படுத்துகிறது. ஆண்டவன் பூங்கா ரோட்டில் தற்போது பக்தர்களின் வருகை அதிகம் உள்ளதால் சாலை ஓரத்தில் உள்ள நடைபாதையில் பொதுமக்கள் அசுத்தம் செய்து வருகின்றனர். நடைமேடையில் சாக்கடை சிலாப்கள் அகற்றப்பட்டு உள்ளன. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதியில் நடக்கும் மனிதர்கள் ,விலங்குகள் தவறி விழும் நிலை உள்ளது.