வாட்ஸ் ஆப் வர்த்தகத்தில் ரூ.11.50 லட்சம் மோசடி
திண்டுக்கல்:திண்டுக்கல்லை அடுத்த செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வியாபாரி பாலசுப்பிரமணியன் 46 சில வாரங்களுக்கு முன்பு இவரது 'வாட்ஸ்- ஆப்' எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது. அந்த இணைப்பை பார்த்ததும் வீடியோ பதிவு ஒளிபரப்பானது. அதில் பேசிய நபர் ஆன்லைன் வர்த்தகத்தில் தாங்கள் கூறும் இணையதளம் மூலம் வர்த்தகம் செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறி உள்ளார். இதை நம்பிய பாலசுப்பிரமணியன், அவர்கள் கூறியபடி சில வங்கி கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளாக ரூ.11 லட்சத்து 66 ஆயிரத்து 935ஐ வர்த்தகத்தில் முதலீடு செய்தார். அதன்பின் வர்த்தக இணையதளம் முடங்கியது. 'வாட்ஸ்-ஆப்' குழுவினரை தொடர்புகொள்ள முயன்றார். குழு கலைக்கப்பட்டதால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. பண மோசடி என்பது தெரிய மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விக்டோரியா லுார்துமேரி விசாரிக்கிறார்.