திண்டுக்கல் மக்காச்சோள வியாபாரியிடம் ரூ.10.75 கோடி மோசடி: சேலம் பெண் கைது
திண்டுக்கல்:திண்டுக்கல்லை சேர்ந்த மக்காச்சோள வியாபாரியிடம் ரூ.10.75 கோடி மோசடி செய்த சேலத்தை சேர்ந்த பெண்ணை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 20பேரை தேடி வருகின்றனர். திண்டுக்கல் கோபாலசமுத்திரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் 48. மக்காச்சோளம் வாங்கி விற்கும் தொழில் செய்கிறார். இவருக்கு 2022ல் சேலத்தை சேர்ந்த சரவணன், மனைவி சங்கீதா ஆகியோரிடம் தொழில் ரீதியாக நட்பு ஏற்பட்டது. அப்போது இவர்கள் , சேலத்தில் மக்காச்சோளத்தை மதிப்புக்கூட்டல் செய்து கிராமத்து உணவு எனும் பெயரில் ஓட்டல் நடத்தி வருவதாகவும், வெளிநாடுகளுக்கு மக்காச்சோளத்தை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்திவருவதாகவும் கூறி உள்ளனர். இதை நம்பிய ராஜ்குமார் அவர்களுடன் வர்த்தகம் செய்துவந்தார். இந்நிலையில் மக்காச்சோளம் கொள்முதல் குறைந்ததால் சில மாதங்களாக சரவணன் நிறுவனத்துக்கு சரக்குகள் அனுப்ப முடியவில்லை. இதுதொடர்பாக பேசிய சரவணன் ''சுற்றுப்பகுதிகளில் மக்காச்சோளம் நேரடி விவசாயம் செய்பவர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். கொள்முதல் செய்யும் மக்காச்சோள மூடைகளுக்கான பணத்தை அந்தந்த விவசாயிகளின் வங்கிக்கணக்குகளுக்கு உங்கள் நிறுவனம் மூலம் கொடுங்கள். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கிடைக்கும் பணத்தில் உங்களின் கொள்முதல் பணத்தை லாபத்தோடு சேர்த்து தருகிறேன்'' எனக்கூறினார் . மோசடி இதற்கு சம்மதித்த ராஜ்குமார்,அவர்கள் கொடுத்த 19 பேரின் வங்கி கணக்கிற்கு ரூ.28 கோடி வரை அனுப்பினார். முதலீட்டை பல தவணைகளாக ராஜ்குமார் பெற்றுவந்த நிலையில் ரூ.10 கோடியே 73லட்சத்து 67ஆயிரத்து 906 பாக்கி இருந்தது. இந்தப்பணத்தை பலமுறை கேட்டும் சரவணன், சங்கீதா தராமல் ஏமாற்றிவந்தனர். இதனால் சந்தேகமடைந்து சேலம் சென்ற ராஜ்குமார் அவர்கள் கொடுத்த 19 பேரின் வங்கிக்கணக்கு விபரங்களை விசாரித்தார். இதில் அவை சரவணன், சங்கீதா தம்பதியிடம் வேலைபார்க்கும் ஊழியர்கள், டிரைவர்,வீட்டுவேலை செய்பவர், செக்யூரிட்டிகளின் வங்கிக்கணக்குகள் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ராஜ்குமார் புகார் செய்தார். விசாரித்த டி.எஸ்.பி.,குமரேசன், இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் சரவணன், சங்கீதா, அவர்களது ஊழியர்கள் என 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் சங்கீதாவை சேலத்தில் கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நிலக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். சரவணன் உட்பட மற்ற 20 பேரை தேடிவருகின்றனர்.