கற்பித்தல் உத்திகளை பயன்படுத்துங்கள் துணைவேந்தர் பஞ்சநதம் அறிவுறுத்தல்
சின்னாளபட்டி: ஆசிரியர்கள், மாணவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு நடைமுறையில் உள்ள கற்பித்தல் உத்திகளை பயன்படுத்த வேண்டும் என, காந்திகிராம பல்கலை துணைவேந்தர் பஞ்சநதம் பேசினார். காந்திகிராம பல்கலை கல்வியியல் துறை சார்பில் முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளி ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், நல்ல சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மாணவர்களுக்கு அனுபவ கல்வியை கற்று கொடுங்கள். மாணவர்களின் வளர்ச்சியை கண்டு பெருமைப்படுபவர்களாகவும், இந்தியா இன்றைய அளவில் கல்வி அறிவில் சிறந்து விளங்கவும் முழுமுதற் காரணமாக சிறப்பு பெறுவது ஆசிரியர்களே. எழுத்தறிவு கொடுத்த இறைவனாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர். மாணவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு நடைமுறையில் உள்ள கற்பித்தல் உத்திகளை பயன்படுத்த வேண்டும் என்றார்.பதிவாளர் சுந்தரமாரி, பேராசிரியர்கள் மீனாட்சி, முத்தையா, உதவி பேராசிரியர் தங்கசாமி பங்கேற்றனர்.