வேடசந்துார்: வேடசந்துார் பஸ் ஸ்டாண்ட் கட்டடம் சேதமடைந்துள்ளதாக கூறி கடைகள் காலி செய்யப்பட்டுள்ளநிலையில் பஸ் ஸ்டாண்ட் கட்டடத்தை மீண்டும் மராமத்து பணிகள் பார்த்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.வேடசந்துாரில்25 ஆண்டுகளுக்கு முன் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்ட நிலையில் ஜனவரி வரை நல்ல முறையில் பயன்பாட்டில் இருந்தது. பஸ் ஸ்டாண்ட் தெற்கு பகுதியில் கூரையின் சைடு பகுதி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதை காரணம் காட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதி முழுவதும் இருந்த கடைகள் காலி செய்யப்பட்டு வெறுமனே பூட்டப்பட்டுள்ளன. இதனால் பரபரப்பாக விளங்கிய பஸ் ஸ்டாண்ட் தற்போது பயன்பாடற்ற பகுதியாக உள்ளது. பஸ் ஸ்டாண்ட் கட்டடத்தை தற்போது இடித்து விட்டால் மீண்டும் புதிய கட்டடம் கட்ட ஒரு சில ஆண்டுகள் ஆகும் என்பதால், தற்போதுள்ள கட்டடத்தை இடிக்காமல் மராமத்து பணிகளை மட்டும் பார்த்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. . மாவட்ட நிர்வாகம்தான் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும். மராமத்து செய்யலாம்
பி.சுகுமார்,வர்த்தக சங்கத் தலைவர்,வேடசந்துார்: தற்போதுள்ள பஸ் ஸ்டாண்ட் நல்ல முறையில் தான் உள்ளது. ஆங்காங்கே சிறுசிறு சிராய்ப்புகள் உடைந்துள்ளன. பஸ் ஸ்டாண்ட் மேல் பகுதி முற்றிலுமாக கொத்திவிட்டு பூசி, கல் பதிக்க வேண்டும். உடைந்த பகுதிகளை நல்ல முறையில் பூச வேண்டும். தமிழக அரசு பஸ் ஸ்டாண்டை புதிதாக கட்ட நிதி ஒதுக்காத நிலையில் அதை இடிப்பது என்பது சரியானது அல்ல. கரூர் பஸ் ஸ்டாண்ட் இடிக்கப்பட்டு சில ஆண்டுகள் கடந்தும் இன்னும் புதிதாக கட்டவில்லை. அதே போல் தான் வேடசந்துாருக்கும் நிலை ஏற்படும். பஸ் ஸ்டாண்டை முற்றிலுமாக இடிக்காமல் மராமத்து பணிகளை மட்டும் பார்த்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதிகாரிகள் கவனம் சொலுத்த வேண்டும்
இல.சக்திவேல், சமூக ஆர்வலர்,வேடசந்துார்: வேடசந்துார் பஸ் ஸ்டாண்ட் கட்டுமானம் நல்ல முறையில் உள்ளது. முறையான பேட்ச் ஒர்க் பார்த்து சுண்ணாம்பு பூச்சு இல்லாமல், தண்ணீர் புகாத வகையில் தரமான பெயின்ட் அடித்தால் இன்னும் 20 ஆண்டுகளுக்கு பஸ் ஸ்டாண்ட் உறுதியாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் இதை செய்ய வேண்டும். இடித்து தள்ளுவது என்பது பெரிய விஷயம் அல்ல. கரூர் மட்டுமின்றி தென் மாவட்ட பகுதிகளிலும் இதே போல் பஸ் ஸ்டாண்ட் இடிக்கப்பட்ட நிலையில் இன்னும் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்படாமல் பல இடங்களில் உள்ளது. எனவே பஸ் ஸ்டாண்ட் இடிக்காமல் முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். நிதி ஒதுக்கியதும் யோசிக்கலாம்
ஆர்.எம்.நடராஜன், சமூக ஆர்வலர், வேடசந்துார்: பஸ் ஸ்டாண்ட் நல்ல முறையில் தான் உள்ளது. சமீப காலமாக பராமரிக்காத காரணத்தால் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டும் பூச்சுக்கள் பெயர்ந்துள்ளன. இடித்து விட்டால் உடனடியாக புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட முடியாத நிலை ஏற்படும். நிதி ஒதுக்கிய பிறகு தற்போதுள்ள பஸ் ஸ்டாண்ட் இடிப்பது தான் முறையானது. பஸ் ஸ்டாண்ட் கட்ட நிதி ஒதுக்காத நிலையில் பஸ் ஸ்டாண்ட் கட்டடத்தை அகற்றுவது என்பது, ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. நல்ல முறையில் உள்ள இந்த பஸ் ஸ்டாண்டில் மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.