உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வழிபாடு

மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வழிபாடு

திண்டுக்கல் : விநாயகர் சதுர்த்தியையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் கோவில்கள், சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்கள், வீடுகளில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில், மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்கள், சந்திப்புகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. கோவில்களிலும், பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். நேற்று அதிகாலை 5:00 மணி முதலே கோவில் நடைகள் திறக்கப்பட்டு விநாயகருக்கு சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடந்தன. திண்டுக்கல்லில் வெள்ளை விநாயகர் கோயிலில், சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. இரவு 7:00 மணிக்கு நான்கு ரதவீதிகளில் திருத்தேரோட்டம் நடந்தது. காந்தி கிராமம் சுயம்பு ஓடை பிள்ளையாருக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரமும், 22 வகை அபிேஷகமும் நடந்தது. இதுபோல திண்டுக்கல் என்.ஜி.ஓ., காலனி ராஜ விநாயகர், கோட்டைகுளம் விநாயகர், ரதவீதி இரட்டை விநாயகர், மாசிலமணிபுரம் மங்கள விநாயகர், கணேஷ் நகர் விநாயகர் கோயில்கள் உள்பட பொதுமக்களும் அவரவர் வீடுகளில் விநாயகர் சிலைகள் வாங்கி வைத்து, சிறப்பு அலங்காரங்கள் செய்து, பால், பழம், கொழுக்கட்டை, பொரி, அவல், வெல்லம், சுண்டல், வேர்கடலை,நாட்டு சர்க்கரை, சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவற்றை வாழை இலையில் படையலிட்டு பூஜைகள் நடத்தினர். சின்னாளபட்டி: சதுர்முக முருகன் கோயிலில், விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடந்தது. விநாயகருக்கு பால் அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன், சதுர்த்தி சிறப்பு பூஜை, மகாதீபாராதனை நடந்தது. செம்பட்டி: கோதண்டராம விநாயகர் கோயில், கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயில், கசவனம்பட்டி மவுன குரு சுவாமி கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. வடமதுரை : மடத்துக்கடை செல்வ விநாயகர், மங்கம்மாள் கேணி சர்வ சித்தி விநாயர், மேற்குரத வீதி சித்திமுக்தி விநாயகர் கோயில் உள்படஅனைத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. வடமதுரை தெற்கு மாரியம்மன் கோயில் தெருவில் இருக்கும் செல்வவிநாயகர் கோயிலில் திண்டுக்கல் ரவுண்ட் ரோடு கணபதிவிநாயகர் கோயில் அர்ச்சகர் சுப்பிரமணிய அஸ்வின் தலைமையிலான குழுவினர் யாக சாலை பூஜைகளை நடத்தினர். ஹிந்து அமைப்புகள், மக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் ஏராளமான இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நத்தம் : மாரியம்மன் கோயில் அருகில் உள்ள லெட்சுமி விநாயகபெருமானுக்கு அருகம்புல்,ரோஜா, மல்லிகை,முல்லை உள்ளிட்ட பல்வேறு வர்ண பூ மாலைகள் சாத்தப்பட்டு 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சர்க்கரை பொங்கலும், கொழுக்கட்டைகளும் பிரசாதமாக வழங்கப்பட்டது.இதைபோலவே நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் விநாயகர், திருமலைக்கேணி விநாயகர், பகவதி அம்மன் கோயில் வெற்றி விநாயகர், குட்டூர் அண்ணாமலையார் கோயில் வலம்புரி விநாயகர்,பெரிய விநாயகர், செல்வ விநாயகர் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பழநி : முருகன் கோயிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி யாகம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட கலசநீரில் விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. அங்கு உள்ள 18 சித்தர்கள் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், பட்டத்து விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஒட்டன்சத்திரம்: குழந்தை வேலப்பர் கோயில் கிரிவலப் பாதையில் உள்ள சக்கர விநாயகர் கோயில் மற்றும் காந்தி மார்க்கெட் நன்மை தரும் தேடி வந்த விநாயகர் கோயில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து இவ்விரு கோயில்களிலும் நடந்த அன்னதான விழாவை துவக்கி வைத்தார். பழைய ஒட்டன்சத்திரம் ஸ்ரீ பட்டத்து விநாயகர், காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள விநாயகர் மற்றும் சக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடந்தது. கொடைக்கானல்: கொடைக்கானல் வர சித்தி விநாயகர்,கோடை இன்டர்நேஷனல் வலம்புரி விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தாண்டிக்குடி பட்டத்து விநாயகர் கோயிலில் சுவாமி மின் ரதத்தில் நகர் பகுதியில் ஊர்வலம் வந்தது. முன்னதாக சதுர்த்தியை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது. அன்னதானம் நடந்தது. பண்ணைக்காடு மங்களம்கொம்பு, கானல்காடு, கே.சி. பட்டி, பாச்சலூர், கொடைக்கானல் மேல்மலை கிராமங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !