| ADDED : செப் 16, 2026 08:14 PM
திண்டுக்கல், செப்.17- திண்டுக்கல்லில் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் துர்கா தலைமையில் நடந்தது. அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் ஒருபகுதியாக மாநகராட்சி கமிஷனர் பிரேம்ஆனந்த் உத்தரவின் பேரில் திண்டுக்கல்லில் மழைநீர் ஓடைகள், வாறுகால்கள் துார்வாரும் பணி நேற்று துவங்கியது. மாநகராட்சி சாலை வெள்ளை விநாயகர் கோயில் அருகே ஜே.சி.பி., உதவியுடன் வாறுகால்கள் துார்வாரப்பட்டன. இதுபோல் நகரின் முக்கிய சந்திப்புகள், கழிவுநீர் இணைப்புகள் உள்ள இடங்களில் அடுத்தடுத்து துார்வாரும் நடக்க உள்ளது.