பிடிவாரன்ட் கணவனை பிடிக்க தாமதம்; சத்தி போலீசை கண்டித்து பெண் ஆவேசம்
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், கருங்கல்பாளையம் ஆறுமுகம் வீதியை சேர்ந்த வரலட்சுமி, 55, நேற்று தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். சமாதானம் செய்த போலீசார், கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில், அதிகாரிகளிடம் மனுவை வழங்க செய்தனர். பின் அவர் கூறியதாவது:எனது கணவர் அய்யப்பன். விருத்தாசலத்தை சேர்ந்தவர். தற்போது சத்தியமங்கலத்தில் தொழில் செய்து வருகிறார். எங்களின் மகள் தனஸ்ரீ. திருமணமாகி தனியாக வசிக்கிறார். நானும், கணவரும் பிரிந்து வாழ்கிறோம். எனக்கும், மகளுக்கும் ஜீவனாம்சம் கோரி, ஈரோடு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். இதில் இருவருக்கும் ஜீவனாம்சம் தர, 2015ல் தீர்ப்பு வெளியானது. கணவர் ஜீவனாம்சம் தராததால் மேல்முறையீடு செய்தேன். இதில் கணவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து, சத்தி போலீசாருக்கு அனுப்பினர். அவரை போலீசார் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் உள்ளனர். அவரை சத்தி போலீசார் பிடித்து, நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். தாமதம் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்.