உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.4.50 லட்சத்துக்கு குழந்தை விற்பனை பெண்கள் உள்பட 5 பேர் ஈரோட்டில் கைது

ரூ.4.50 லட்சத்துக்கு குழந்தை விற்பனை பெண்கள் உள்பட 5 பேர் ஈரோட்டில் கைது

ஈரோடு: பெண் குழந்தையை விற்ற விவகாரத்தில், புரோக்கராக செயல்பட்ட நான்கு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேரை, ஈரோடு போலீசார் கைது செய்தனர். ஈரோடு, கனிராவுத்தர் குளம், மசூதி அருகே வசிப்பவர் நித்யா, 28; இவரது சொந்த ஊர் திருவையாறு, திருப்பள்ளனம் மேல தெரு, எடிசன் என்பவருடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து, ஈரோடு, மாணிக்கம்பாளையம், முனியப்பன் கோவில் வீதி, கிழக்குகாட்டில் சந்தோஷ்குமார், 28, என்பவருடன் இரண்டு ஆண்டாக வசித்து வருகிறார். இவர்களுக்கு, 40 நாட்களுக்கு முன், ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை வேண்டாம் என்று தம்பதியர் முடிவு செய்து, பவானி, லட்சுமி நகரை சேர்ந்த சித்திக்கா பானு, 44, உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து விற்க முடிவு செய்தனர்.ஈரோடு, பெரிய சேமூர், கனிராவுத்தர் குளம், ராஜா மனைவி செல்வி, 47; அவருடன் இருந்த இரு ஆண்களிடம் குழந்தையை கொடுத்துள்ளனர். அப்போது, 4.50 லட்சம் ரூபாய் கைமாறியது. இந்த கொடுக்கல், வாங்கல் விவகாரம், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கடந்த மாதம், 30ம் தேதி நடந்துள்ளது. இதில், 1.30 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்ட செல்வி, மீதி பணத்தை சந்தோஷ்குமாரிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் ஈரோடு வந்த நித்யாவை, அவரது சொந்த ஊருக்கு செல்லுமாறு சந்தோஷ்குமார் கூற, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதை தொடர்ந்து, தனக்கு பணம் வேண்டாம்; குழந்தைதான் வேண்டும் என்று நித்யா கூறியதால், சந்தோஷ்குமார் கோபித்துக்கொண்டு சென்று விட்டார். இதுபற்றி ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் நித்யா தெரிவித்துள்ளார். வீரப்பன்சத்திரம் போலீசில் அவர் இதுகுறித்து புகாரளித்தார். இதன் அடிப்படையில் விசாரித்த வீரப்பன்சத்திரம் போலீசார், பெண் குழந்தையை விற்க புரோக்கராக செயல்பட்ட செல்வி, சித்திக்கா பானு, ஈரோடு பெரிய சேமூர் எல்லப்பாளையம் சக்தி நகர் சக்திவேல் மனைவி ராதா, 39, எல்லப்பாளையம், ராசாங்காடு கணேசன் மனைவி ரேவதி, 35, சந்தோஷ்குமார் என ஐந்து பேரை கைது செய்தனர். குழந்தையை விற்ற வழக்கில் நித்யாவும் முதல் நபராக சேர்க்கப்பட்டுள்ளார். குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதி உள்ளிட்ட நால்வரை தேடி வருவதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ