வேளாண் கண்காட்சி - கருத்தரங்குதோட்டக்கலை இயக்குனர் ஆய்வு
ஈரோடு:ஈரோடு, சிக்கய்யா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில், மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு மே மாதம் நடக்கிறது. இதற்கான இடத்தை துறை இயக்குனர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். விவசாயிகள், கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்துவோர், ஏற்றுமதியாளர்களுக்கு இடையே நவீன தொழில் நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண் இயந்திரங்கள், மதிப்பு கூட்டும் தொழில் நுட்பங்கள் பற்றி விழிப்புணர்வு, இக்கண்காட்சி மூலம் ஏற்படுத்தப்படும். இதில் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி என, 10 மாவட்டங்களை சேர்ந்தோர் பங்கேற்கின்றனர். அரசு துறைகள் சார்பில், 70 அரங்கு, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உட்பட நுாறு அரங்குகள் அமைக்கப்படும் என தெரிகிறது. ஆய்வில் மாநகராட்சி ஆணையர் தனலட்சுமி, வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி, தோட்டக்கலை துணை இயக்குனர் மரகதமணி உட்பட பலர் பங்கேற்றனர்.