தி.மு.க.,வினர் சொல்படி சர்வே மீண்டும் அளவீடு செய்ய முறையீடு
ஈரோடு, சிவகிரி டவுன் பஞ்., மூன்றாவது வார்டு தலையநல்லுார் பகுதி மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வழங்கிய மனுவில் கூறியதாவது:தலையநல்லுார் பகுதியில் பொதுப்பாதையில் ஆக்கிரமிப்பு எனக்கூறி சில மாதத்துக்கு முன், நாங்கள் யாரும் இல்லாத போது வருவாய் துறையினர் அளவீடு செய்து, அந்த இடத்தில் கற்கள் ஊன்றியுள்ளனர். அங்கு, 12 குடும்பங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி, நோட்டீஸ் வழங்கி உள்ளனர். அந்த கடிதத்தில், ரோட்டின் கிழக்கு பக்கம், இரு குடும்பத்தினர் பாத்ரூம், தென்னை மரம் மட்டுமே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.எனவே மீண்டும் அளவீடு செய்ய கோரி கடந்த, 9ல் அளவீடு செய்தனர். அப்போது நான்கு குடும்பங்களின் பாத்ரூம், ஒரு வீடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகவும், அங்குள்ள, 12 வீடுகளிலும் ஆக்கிரமிப்பு இருப்பதாக கூறியுள்ளனர். அங்குள்ள பொதுப்பாதைக்காக அப்பகுதி தி.மு.க., பிரமுகர்கள் சிலர், வருவாய் துறையினரிடம் கூறி இவ்வாறு நடந்து கொள்கின்றனர். இதுபற்றி விசாரித்து உண்மை நிலையை அளவீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.