ரூ.3.50 லட்சம் மோசடி ஈரோடு எஸ்.பி.,யிடம் புகார்
ஈரோடு :ஈரோடு சூரம்பட்டி நால் ரோடு மாரப்ப கவுண்டர் வீதியை சேர்ந்த டெய்லர் மரகதம், 38, நேற்று ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனு விபரம்: கணவர் இன்றி, 2 பெண் குழந்தைகளுடன் வசிக்கிறேன். என் மகள் உடல் நலக்குறைவால் கடன் பெற ஆலோசனை வேண்டி, வீட்டின் அருகில் வசிக்கும் தனியார் வங்கியில் வேலை பார்க்கும் கவின்குமாரிடம் கேட்டேன். அவர், தனிநபர் கடன் வாங்கினால் காலதாமதமாகும். அதற்கு பதில் விலை உயர்ந்த டிவி, மொபைல்போனை வங்கி தவணையில் வாங்கி, அதனை விற்று 3 தினங்களில் பணம் பெறலாம் என கூறினார். கவின்குமார் கடந்த ஜன.,29ல் அகில்மேட்டில் உள்ள மொபைல்போன் கடையில், ரூ.45 ஆயிரம் மதிப்பிலான மொபைல் போனை வாங்கி, அவருடன் வேலை பார்க்கும் நபருடன் சேர்ந்து விற்றார். 10 நாளாகியும் பணம் தரவில்லை. எனது வங்கி கடனை நிராகரிக்குமாறு கூறினேன். எனது பெயரில் வாங்கிய கடனை அவர்கள் நிராகரிக்காததால், வங்கி ஊழியர்கள் கடன் தவணை செலுத்த கோரினர். கவின்குமார் வேலை செய்யும் வங்கிக்கு சென்று கேட்டபோது, முன்னுக்கு பின் முரணாக பேசினார். தகாத வார்த்தையால் பேசி மிரட்டினார். ஈரோடு ஜி.ஹெச் போலீசில் புகார் அளித்தேன். நடவடிக்கை எடுக்கவில்லை. வங்கி கடனுக்காக சென்ற என்னை ஏமாற்றி, எனது பெயரில் மொபைல்போனை வாங்கி அதை விற்று பணத்தை பெற்ற கவின்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுபோல, 10க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி, டிவி, மொபைல்போன் பெற்று, ரூ.3.50 லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.