கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு ரூ.700 கோடி விரயம் என புகார்
ஈரோடு:கீழ்பவானி கால்வாய் மறு சீரமைப்புக்கு, 700 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டதாக, பாசன பயனாளிகள் நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈரோட்டில், கீழ்பவானி பாசன பயனாளிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: கீழ்பவானி பாசனம் நடைமுறைக்கு வந்து, 70 ஆண்டுகளாகிறது. கரைகளில் கொட்டப்பட்ட மண் வலுவிழந்துள்ளது. கால்வாயை மறுசீரமைப்பு செய்ய, 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பாசன பயனாளிகள் எதிர்ப்புக்கு இடையே, ஆங்காங்கு கால்வாயில் அவசர கதியில் வேலை நடந்தது. பழைய கட்டுமானத்தில் வரும் நீர் கசிவை நிறுத்த வேண்டும் என்பதற்காக, ஒட்டு மொத்த கட்டுமானத்தை சில இடங்களில் சீரமைத்தனர். ஆனாலும், நீர் கசிவு பல இடங்களில் தொடர்கிறது. துார்வாருகிறோம் என்ற பெயரில் கால்வாய்க்குள் உழவு செய்துள்ளனர். அணை கட்டிய காலத்தில் கால்வாய்களை வெட்டி, நில எடுப்பு செய்ய, 10.50 கோடி ரூபாய் மட்டுமே செலவானது. இன்று மறுசீரமைப்புக்கு, 700 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது. முறைகேடாக, விரயமாக செலவிடப்பட்ட இத்தொகை தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.