அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு:தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், ஈரோடு தாலுகா அலுவலகம் முன், ஒரு மணி நேர வெளிநடப்புடன் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.நிதி சாரா கோரிக்கைகளை மட்டுமே தற்போது நிறைவேற்ற இயலும். நிதி சார்ந்த கோரிக்கைகளை தற்போது செயல்படுத்த இயலாது என முதல்வர் தெரிவித்துள்ளார். இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டது.முதல்வரின் இந்த அறிவிப்பால், புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் பணிபுரியும் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.எனவே, நிதியை கருத்தில் கொள்ளாமல், அரசு ஊழியர் உள்ளிட்ட அனைத்து அரசு துறை சார்ந்த ஊழியர் நல கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் வட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் மணிகண்டன், வட்ட பொருளாளர் சமயமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.