ரூ.48 லட்சம் மதிப்பில் ஹெராயின் பறிமுதல் அசாம் வாலிபர் இருவர் கைது
ஈரோடு: ஈரோட்டில், அசாம் மாநிலத்தை சேர்ந்த இரு வாலிபர்களிடம், 48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 48 கிராம் ஹெராயின் போதை பொருளை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். ஈரோடு ரயில்வே ஸ்டேஷன், புதிய டூவீலர் ஸ்டாண்ட் அருகே, இரு வாலிபர்கள் போதை பொருட்களை வைத்திருப்பதாக, ஈரோடு மதுவிலக்கு போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று, சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த, இரு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து, கன்னியாகுமரி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், கேரள மாநிலம், ஆலுவா வரை செல்ல முன்பதிவு டிக்கெட் எடுத்திருந்ததும், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து, 48 கிராம் ஹெராயின் போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு, 48 லட்சம் ரூபாய். போதை பொருளை வைத்திருந்த, அசாம் மாநிலம், மாரிகான் பகு-தியை சேர்ந்த ஹசானுஜ் ஜமால், 32, அசாத்துல் இஸ்லாம், 29, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரு-கின்றனர்.