முதியவரை மிரட்டி ரூ.42 லட்சம் பறிப்பு கில்லாடி இளம்பெண், தாய்க்கு வலை
பவானி: அம்மாபேட்டை அருகே பூனாச்சி, முகாசிப்புதுார் கிழக்கு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் துரை ராமசாமி, 63; பழைய இரும்பு வியாபாரி. பூனாச்சி மெயின் ரோட்டை சேர்ந்தவர் பத்மாவதி. இவரது மகள் பாக்கியலட்சுமி, 22; இவர்களிடையே கொடுக்கல்-வாங்கல் இருந்தது. ஒன்றைரை ஆண்டுகளுக்கு முன் தனது பிறந்த நாளில், துரை ராமசாமியிடம் பாக்கியலட்சுமி ஆசிர்வாதம் பெற்றுள்ளார். பாக்கியலட்சுமி தலையில் கை வைத்து ஆசி அளித்ததை, வீடியோ எடுத்துள்ளனர். அதை வைத்து மானபங்க புகார் கொடுத்து விடுவதாக மிரட்டி, தாய், மகள் இருவரும், துரை ராமசாமியிடம் பணம் பறித்துள்ளார். இதனால், ௪௨ லட்சம் ரூபாய் வரை, துரை ராமசாமி கொடுத்துள்ளார். அதன் பிறகும் பணம் கேட்டு மிரட்டவே, அம்மாபேட்டை போலீசில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், தாய் மற்றும் மகளை தேடி வருகின்றனர்.