கன்றுக்குட்டியை தாக்கிய சிறுத்தை: விவசாயிகள் அச்சம்
டி.என்.பாளையம்:டி.என், பாளையம் அருகே உள்ள கணக்கம்பாளையத்தில் கடந்த சில நாட்களாக, சிறுத்தை நடமாடுவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். டி.என்.பாளையம் அடுத்த கணக்கம்பாளையம், பகவதி நகர் குளம் வற்றா கரை தோட்டத்தை சேர்ந்தவர் சவுந்தர், 34; விவசாயி. இவர் தனது சொந்த விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அத்துடன் தோட்டத்தில் ஆடு, மாடு வளர்த்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன், சவுந்தரின் தோட்டத்திற்குள் நள்ளிரவில் புகுந்த சிறுத்தை, கன்று குட்டியை தாக்கியது. அங்கிருந்த வளர்ப்பு நாய் சத்தமிடமே, சிறுத்தை தப்பி ஓடியது.சிறுத்தையின் கால் தடமும் பதிவாகியுள்ளது. இது குறித்து சவுந்தர், டி.என்.பாளையம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையினர், கால் தடத்தை வைத்து சிறுத்தை நடமாடியதை உறுதி செய்தனர். வனத்துறையினரிடம், விவசாயிகள் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்கும் படி கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை கூண்டு வைக்காமல் வனத்துறை காலம் தாழ்த்தி வருவதாக கணக்கம்பாளையம் பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.