மூதாட்டியிடம் 6.5 பவுன் வழிப்பறி செய்தவர் கைது
ஈரோடு, ஈரோட்டில், மூதாட்டியின் கழுத்தில் இருந்த, 6.5 பவுன் நகையை பறித்த பழங்குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். கொடுமுடி, தாமரை பாளையம் பகவதி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பழனிசாமி மனைவி சரஸ்வதி, 65. பழனிசாமி இறந்து விட்டார். சரஸ்வதி விவசாயம் செய்கிறார். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். ஓசூரில் உள்ள மூத்த மகன் சரவணனை பார்க்க, கொடுமுடியில் இருந்து பஸ்சில் வந்து ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள, ஈரோடு காளை மாட்டு சிலை பஸ் ஸ்டாப்பில் இறங்கி, ரயில்வே ஸ்டேஷன் நோக்கி நேற்று முன்தினம் மதியம், 1:30 மணியளவில் நடந்து சென்றார்.அப்போது அவரிடம் பேச்சு கொடுத்த நபர், குறுக்கு வழியில் எளிதில் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லலாம் என்று கூறி அழைத்து சென்றார். அங்கு சரஸ்வதி கழுத்தில் இருந்த, 6.5 பவுன் தங்க செயினை பிடுங்கி கொண்டு ஓட்டம் பிடித்தார். சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி, அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர். இதில் திருவையாறு கும்பகோணம் சாலையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் அனு பார்த்திபன், 38, என தெரியவந்தது. இவர் தற்போது கொல்லம்பாளையத்தில் வசிக்கிறார். ரைஸ் மில் கடைக்கு வேலைக்கு செல்கிறார். பழங்குற்றவாளியான இவரை கைது செய்து விசாரித்தனர். நகையை நாமக்கல்லில் உள்ள நகை கடையில் அடமானம் வைத்ததாக தெரிவித்துள்ளார். போலீசார் அவரை அங்கு அழைத்து சென்றனர். ஆனால் அது உண்மையில்லை என தெரியவந்தது.தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.