5 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு
ஈரோடு:ஈரோடு பழையபாளையத்தில் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் அமைந்துள்ளது. கடந்த தி.மு.க ஆட்சியில் தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமமான முத்துசாமி, பெரியார் நகரில் உள்ள தனது இல்லத்தையே முகாம் அலுவலகமாக பயன்படுத்தினார். இதனால் எம்.எல்.ஏ., அலுவலகம் பூட்டியே கிடந்தது. 2026 தேர்தலில் ஈரோடு மேற்கில் போட்டியிட்ட த.வெ.க., வேட்பாளர் ஆனந்தமோகன் வெற்றி பெற்றார். இதையடுத்து எம்.எல்.ஏ., அலுவலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவெடுத்தனர். மூன்று லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, கதவுகள் மற்றும் கழிவறை சீரமைப்பு, சுவர்களுக்கு பெயிண்ட் அடிப்பது உள்ளிட்ட பல்வேறு பணி மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. கைத்தறி, துணிநுால் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி திறந்து வைத்தார். எம்.எல்.ஏ., அலுவலகம் நாள்தோறும் திறக்கப்படும். மக்கள் கோரிக்கை தொடர்பாக புகாரளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.