உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீர்க்கப்படாத 7 பிரச்னை; பட்டியல் வாசித்த எம்.பி.,

தீர்க்கப்படாத 7 பிரச்னை; பட்டியல் வாசித்த எம்.பி.,

திருப்பூர், பொதுமக்களின் மனுக்கள் மீது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காததை குத்திக்காட்டியும், நீண்ட காலமாக தீர்க்கப்படாத ஏழு மனுக்களை விளக்கியும் திஷா கூட்டத்தில், எம்.பி., சுப்பிராயன் பேசினார்.திருப்பூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் (திஷா), கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. எம்.பி., சுப்பராயன் தலைமை வகித்தார். கலெக்டர் மனிஷ் நாரணவரே முன்னிலை வகித்தார். கோவை எம்.பி., கணபதி ராஜ்குமார், ஈரோடு எம்.பி., பிரகாஷ், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமயணியம், மாநகராட்சி கமிஷனர் அமித் மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.மொத்தம், 45 அரசு துறை சார்ந்த அதிகாரிகள், தங்கள் துறைகளில் நடைபெற்றுவரும் பணிகளின் நிலை குறித்து பேசினர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், குடிநீர் பிரச்னை, தாமத பணிகளை சுட்டிக்காட்டினர். முந்தைய திஷா கூட்டத்தில் எம்.பி.,க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அந்தந்த அரசு துறையினர் பதிலளித்தனர்.கூட்டத்தில் திஷா கமிட்டி தலைவர், எம்.பி., சுப்பராயன் பேசியதாவது: மக்கள் தங்கள் பிரச்னைகள், தேவைகளை, மனுக்களாக முன் வைக்கின்றனர். அந்த மனுக்கள் மீது, காலத்தே தீர்வு காண்பது அவசியம். ஆனால், நடைமுறையில் அது நிறைவேறுவதில்லை.அரசு துறை அதிகாரிகள், அலுவலர்கள், மக்களின் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணவேண்டும். என்னிடமே கைவசம் ஏழு பிரச்னைகள் இருக்கின்றன. பிரச்னைகள் உரிய காலத்தில் தீர்க்கப்படவில்லையென்றால், மக்கள் அதிருப்தி அடைகின்றனர்.தாராபுரத்தில் உபரி நிலத்தை, நீண்ட போராட்டத்துக்கு பின், கோர்ட் வரை சென்று போராடி, பட்டியல் சமூகத்தினர் 45 பேருக்கு பெற்றுக்கொடுத்தோம். தங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில், அவர்கள் விதைப்பு பணிகளையும் துவங்கி விட்டனர். சிட்டா அடங்கலில், கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கு முடிந்து பல ஆண்டுகளாகியும், வருவாய்த்துறையில் அதனை நீக்கம் செய்ய வலியுறுத்தியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.தாராபுரம் தாலுகாவில், விவசாய பயன்பாட்டுக்கான பட்டா கேட்டு மனு அளித்திருந்தனர். 2023ல், டி.ஆர்.ஓ.,வாக இருந்த ஜெய்பீம், உடனடியாக 17 பேரை அழைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை. கலெக்டர் நேரடியாக விசாரித்து தீர்வுதரவேண்டும்.மிகவும் பிற்படுத்தப்பட்ட இரண்டு குடும்பத்தினர். அவர்களுக்கு இந்தியாவிலோ, உலகிலோ எங்கும் வீடோ, நிலமோ இல்லை. அவர்களுக்கு குடியிருப்பதற்காக மூன்று சென்ட் நிலம் வழங்ககோரி கடந்த 2022 முதல் கோரிக்கை வைக்கப்பட்டது.அதுவும், நிலுவையில் உள்ளது. நஞ்சராயன் குளம் அருகே அரசுக்கு சொந்தமான, 8 ஏக்கர் நிலம், தனியாருக்கு, அறக்கட்டளை என்கிற பெயரில் மாற்றப்பட்டுவிட்டது. சில அதிகாரிகள், அந்த முறைகேடான நடவடிக்கைகளுக்கு உதவி புரிந்துள்ளனர் என்பதை உணர முடிகிறது. தனியார் அறக்கட்டளையிடம் உள்ள அந்த அரசு நிலத்தை, மீண்டும் கையகப்படுத்த வேண்டும்.இதன்மீது முறையான விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு சுப்பராயன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ