அரசு மருத்துவமனை அருகில் கோர்ட் கட்ட எதிர்ப்பு
ஈரோடு: சத்தியமங்கலம் வக்கீல் சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை கோரிக்கை மனு வழங்கினர். மனு விபரம்:சத்தி ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதனால் சத்தி அரசு மருத்துவமனைக்கு அருகே, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட, அரசு மற்றும் நீதித்துறை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த இடத்துக்கு சென்று வர குறுகிய சாலை வசதியே உள்ளது. பஸ் வசதி இல்லாததால் குறித்த நேரத்தில் மக்கள் நீதிமன்றத்துக்கு சென்று வர தாமதம் ஆகும். அரசு மருத்துவமனை பிணவறை அருகில் நீதிமன்றம் இருந்தால், பெண்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மருத்துவமனை அருகே நீதிமன்றத்தை அமைக்கக்கூடாது. பஸ் ஸ்டாண்ட் அருகே அரியப்பாளையம் கிராமத்தில் கட்ட இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வருவாய் துறை ஆவணங்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினருக்கும் ஏற்றதாக, அமைந்துள்ள இங்கு நீதிமன்றம் கட்ட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.