உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டிபாசிட் பெற்று நிதி நிறுவனம் மோசடி பணம் கேட்டு மக்கள் மறியல் போராட்டம்

டிபாசிட் பெற்று நிதி நிறுவனம் மோசடி பணம் கேட்டு மக்கள் மறியல் போராட்டம்

சத்திமங்கலம், தாங்கள் செலுத்திய டிபாசிட் தொகையை, வட்டியுடன் சேர்த்து தரக்கோரி, சத்தியமங்கலத்தில் நேற்று நுாற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் திம்மையன் புதுாரை சேர்ந்தவர் கார்த்தி, 38. ஐந்தாண்டுகளாக சத்தி, கோபி, கோவை, திருப்பூர், கொள்ளேகால், மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் டி.ஆர். கார்த்தி சிட் இந்தியா என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி, கோபியை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. நிதி நிறுவனத்தில், குறைந்த காலத்தில் அதிக வட்டி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி, ஒரு லட்ச ரூபாய் முதல் டிபாசிட் செய்யலாம் என அறிவிப்பு வெளியிட்டனர். கவர்ச்சிகர விளம்பரத்தை பார்த்து, சத்தியமங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கானோர் நிதி நிறுவனத்தில் டிபாசிட் செய்துள்ளனர்.இந்நிலையில், டிபாசிட் செய்தவர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக வட்டி தொகை கொடுக்கவில்லை. வாடிக்கையாளர்கள் வட்டி தொகையடன், டிபாசிட் தொகையை கேட்டுள்ளனர். நிதி நிறுவனத்தினர் சரியாக பதிலளிக்கவில்லை. இந்நிலையில், நேற்று நிதி நிறுவன சத்தி கிளை மேலாளர் சரவணனிடம் டிபாசிட், வட்டி தொகையை வாடிக்கையாளர்கள் கேட்டனர். அவரது பதில் திருப்தி அளிக்காத நிலையில், கோவை சாலையில் காலை, 11:00 மணிக்கு 100க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, வாகனங்களை போலீசார் மாற்று பாதையில் திருப்பி விட்டனர்.பல கோடி ரூபாய் பெற்று பணம் கொடுக்காமல் இருப்பதாக கூறுகிறீர்கள். எனவே பொருளாதார குற்றப்பிரிவு, ஈரோடு எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்தால், சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்வர் என, மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, 11:30 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இப்பிரச்னையால் சத்தியில் உள்ள கிளை அலுவலகத்தை, ஊழியர்கள் பூட்டி விட்டு சென்றனர்.பொதுமக்கள் கூறுகையில்,'சத்தியமங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், ஆயிரக்கணக்கானோர் இந்நிதி நிறுவனத்தில் டிபாசிட் செய்துள்ளனர். அந்த தொகை, 100 கோடி ரூபாய்க்கு மேலிருக்கும். பொதுமக்கள் தாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப கேட்டு வருகின்றனர்,' என்றனர்.போலீசார் கூறுகையில்,' பொதுமக்கள் உரிய ஆதாரங்களுடன், தங்கள் புகார் மனுவை போலீசாருக்கு அளித்தால்தான், இந்நிதி நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் பெற்ற டிபாசிட் தொகை எவ்வளவு என்பது தெரியவரும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ