பெருமாள் திருக்கல்யாண உற்சவம்
சென்னிமலை:சென்னிமலையை அடுத்த மேலப்பாளையம் ஆதி நாராயண பெருமாள் கோவிலில், புரட்டாசி விழாவையொட்டி, அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம், பெருமாள் பஜனை வழிபாட்டு மன்றம் சார்பாக, ஆதிநாரயண பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது.இதையொட்டி நேற்று மாலை, கைலாசநாதர் கோவிலில் இருந்து, பெண்கள் சீர்வரிசை எடுத்துக்கொண்டு, ௧00க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நாதஸ்வரம், தவில் மங்கள இசை வாத்தியங்களுடன் ஊர்வலமாக நான்கு ராஜவீதிகள் வழியாக வலம் வந்து, பெருமாள் கோவிலை அடைந்தனர். அங்கு மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. பிறகு அலர்மேலு மங்கை நாச்சியார் அம்மை சமேத ஆதிநாராயண பெருமாளுக்கு, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்தனர். பிறகு திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் ஜெயராம பட்டாச்சார்யார் நடத்தி வைத்தார். மாங்கல்ய தாரணத்தை (திருப்பூட்டு) தொடர்ந்து, ஆசீர்வாதம், சுவாமி திருவீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.