கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
கரூர் :கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், ஆவணி மாத பிரதோஷ விழா கொண்டாடப்பட்டது.பிரசித்தி பெற்ற கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி சிலைக்கு, ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி, நேற்று மாலை, 4:30 மணி முதல் பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபி ேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து மூலவர், நடராஜர் மற்றும் நந்தி சிலைக்கு நடந்த, மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* நன்செய் புகழூர் பாகவல்லி அம்பிகை, சமேத மேகபாலீஸ்வரர் கோவில், புன்னம் புன்னைவன நாதர் உடனுறை, புன்னைவன நாயகி கோவில், திருகாடுதுறை மாதேஸ்வரன் கோவில், நத்தமேடு ஈஸ்வரன் கோவில்களில் ஆவணி மாத பிரதோஷத்தை யொட்டி, நந்தி சிலைகள் மற்றும் மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.