திருக்கல்யாண உற்சவத்துடன் சஷ்டி விழா நிறைவு விழாக்கோலம் பூண்ட முருகப்பெருமான் கோவில்கள்
- நிருபர் குழு -முருகப்பெருமான் குடிகொண்டுள்ள கோவில்களில், திருக்கல்யாண உற்சவத்துடன் கந்த சஷ்டி விழா, நேற்று நிறைவுக்கு வந்தது. மனத்தில் குடியிருக்கும் ஆண்டவனை, மணக்கோலத்தில் தரிசிக்க குவிந்த பக்தர்களால், சென்னிமலை, திண்டல்மலை உள்ளிட்ட முருகப்பெருமான் ஆலயங்கள் களை கட்டின.சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு ஆறு நாள் கந்த சஷ்டி விழா கடந்த, ௨ம் தேதி கோலாகலமாக தொடங்கியது.இதில், 1,045க்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். தினமும் முருகப்பெருமானை வணங்கி வந்தனர். நேற்று முன்தினம் சூரசம்ஹார விழா நான்கு ராஜவீதிகளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடந்தது. இந்நிலையில் கைலாசநாதர் கோவிலில், நேற்று காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.தம்பதி சமேத முருகப்பெருமானுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்தனர். மணமேடை அமைத்து தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவச்சாரியார், தெய்வயானைக்கு மங்கள நாண் அணிவித்து, திருக்கல்யாண உற்சவத்தை நடத்தினார், அதை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் மொய் எழுதினர். அதேசமயம் சஷ்டி விரதம் இருந்த பக்தர்களின் காப்பை, கோவில் அர்ச்சகர்கள் கழற்றி விரதத்தை முடித்து வைத்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கானோர் சுவாமியை தரிசனம் செய்தனர்.திண்டலில்....ஈரோடு அருகே திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வேலாயுதசுவாமி உற்சவர் சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. ஆண்டுதோறும் கோவில் வளாகத்தில் திருக்கல்யாணம் நடக்கும். நடப்பாண்டு மலை அடிவாரத்தில் பிரமாண்ட மேடை அமைத்து நடந்தது. இதனால் பக்தர்கள் சிரமமின்றி திருக்கல்யாணத்தை தரிசிக்க முடிந்தது. விழாவில் மணமான பெண்களுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்தாக அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் வள்ளி--தெய்வானை சமேத வேலாயுதசுவாமி திருவீதியுலா நடந்தது.இதேபோல் ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், மகிமாலீஸ்வரர் கோவில், காவிரிக்கரை சோழீஸ்வரர் கோவில், கோட்டை முத்துகுமாரசாமி கோவில், ரயில்வே காலனி சுப்பிரமணிய சுவாமி கோவில், முனிசிபல்காலனி பாலமுருகன் கோவில்களில் திருக்கல்யாணம் நடந்தது.பச்சைமலையில்...கோபி பச்சைமலை மற்றும் பவளமலை முருகன் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நேற்று காலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.கொடுமுடியில்...கொடுமுடி மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவிலில், முருகன், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.