உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நுகர்வோரே ராஜா; உரிமைகள் ஏராளம்

நுகர்வோரே ராஜா; உரிமைகள் ஏராளம்

திருப்பூர், 'நுகர்வோர் என்பவர் ராஜாவை போன்றவர். சட்ட ரீதியாக, நுகர்வோருக்கு ஏராளமான உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன' என, புத்தாக்க பயிற்சியில் தெரிவிக்கப்பட்டது.திருப்பூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் -2019 குறித்த புத்தாக்கப் பயிற்சி, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் தீபா, நுகர்வோரின் உரிமைகள், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து விளக்கம் அளித்தார்.நிகழ்வில் நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் ரத்தினசாமி பேசியதாவது: ஒரு பொருள் அல்லது சேவையை வாங்கி பயன்படுத்தும் அனைவருமே நுகர்வோர்தான். அந்தவகையில், பிறந்த குழந்தை முதல் இறக்கும் வரை எல்லோரும் நுகர்வோராகவே இருக்கிறோம். நுகர்வோர் என்பவர் ராஜா போன்றவர். நுகர்வோருக்கு, பாதுகாப்புக்கான உரிமை, தகவல் அறியும் உரிமை, கருத்து கேட்கும் உரிமை, குறை தீர்உரிமை, நுகர்வோர் கல்வி உரிமை என எல்லா வகை உரிமையும் உள்ளன. கடைகளில் பொருட்கள் வாங்கும்போது, தயாரிப்பு, காலாவதி தேதி, அதிகபட்ச விலை விவரங்களை கட்டாயம் பார்க்கவேண்டும்; வாங்கும் பொருள் அல்லது சேவைக்கு உரிய பில் கேட்டுப்பெறவேண்டும்.இதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், அந்த பொருளை தயாரித்த உற்பத்தியாளர் பொறுப்பாகிறார். அவர் நுகர்வோருக்கு அந்த பொருளை சரி செய்து அல்லது மாற்றி வழங்கவேண்டும்.ஆனால் உற்பத்தியாளர் சரி செய்துதர மறுத்தால், அந்த சூழலில் நுகர்வோர், நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம். நுகர்வோர் சுயமாகவோ, வக்கீல் அல்லது சரியான வழியில் நுகர்வோர் அமைப்புகள் வாயிலாகவோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். ஒரு பொருள் அல்லது சேவையை பணம் கொடுத்து வாங்கியிருந்தால் மட்டுமே நுகர்வோராக வழக்கு தொடரமுடியும். அந்த பொருளை வாங்கியதற்கான ரசீது; வேறு சேவைகள் எனில், ஒப்பந்தம் சார்ந்த ஆவணங்களை வைத்திருக்கவேண்டும். வாங்கும் பொருள் அல்லது சேவைக்கு ரசீது தர மறுத்தாலும், நுகர்வோர் கேட்டு பெறமுடியும்; இல்லாவிடில், உரிய சட்ட வழிகளை கையாளலாம். இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !