ஐயப்ப பக்தர்களுக்கு இருமுடி பை தயாரிக்கும் பணி தீவிரம்
ஈரோடு: சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், நெய் தேங்காய் மற்றும் பூஜை பொருட்களை ஜோல்னா பையில் வைத்து கொண்டு செல்வர். வரும், 16ம் தேதி கார்த்திகை மாதம் பிறக்கிறது. இதனால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக, ஈரோட்டில் இருமுடி பை, ஜோல்னா பை தயரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இதுகுறித்து ஈரோட்டை சேர்ந்த இருமுடி மற்றும் ஜோல்னா பை தயாரிப்பாளர்கள் கூறியதாவது: சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக கடந்த மாதம் முதலே பை தயாரிப்பு பணியை தொடங்கி விட்டோம். இதில் அனுபவம் கொண்ட டைலர்களை வைத்து தைக்கிறோம். கருப்பு, நீலம், ஆரஞ்சு ஆகிய வண்ணங்களில் தயாரிக்கிறோம். தைக்கும் பணியை முடித்தவுடன், பிரிண்டிங் பட்டறையில் ஐயப்பன் படம் மற்றும் 'சுவாமியே சரணம் ஐயப்பா' போன்ற வாசகத்தை அச்சிடுவோம். அதன் பிறகே ஆர்டர் வழங்கியவர்களுக்கு பை வழங்கப்படும். இவ்வாறு கூறினர்.