காதல் மனைவியுடன் சேர்த்து வைக்கக் கோரி 100 அடி டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
உளுந்துார்பேட்டை : காதல் மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி நள்ளிரவில் மொபைல் போன் டவர் மீது ஏறி அலப்பறையில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு நிலவியது.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையை சேர்ந்தவர் சலீம்பாஷா மகன் கலீம், 21; கூலித்தொழிலாளி. இவரது மனைவி புவனா, 19; இருவரும் 6 மாதங்களாக காதலித்து கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.இதற்கிடையே, புவனாவை காணவில்லை என அவரது தாய் உமா அளித்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார், இருவரையும் மீட்டு விசாரணை நடத்தி, புவனா மேஜர் என்பதால் கலீமுடன் புவனாவை அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் கலீம் வீட்டிற்கு சென்ற உமா, புவனாவிடம் பேசி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஆனால் புவனாவை திருப்பி கணவர் வீட்டிற்கு அனுப்பவில்லை.இதனால் மனமுடைந்த கலீம், நேற்று முன்தினம் நள்ளிரவு 11:10 மணியளவில் அப்பகுதியில் உள்ள 100 அடி உயரம் உள்ள மொபைல்போன் டவரில் ஏறி தனது காதல் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும். இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என கத்தி கூச்சலிட்டார்.தகவலறிந்த உளுந்துார்பேட்டை இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சமரசம் செய்தும் கலீம் கீழே இறங்கவில்லை.அதனைத் தொடர்ந்து டி.ஒரத்தூரில் இருந்த புவனாவை வரவழைத்த பிறகு, நள்ளிரவு 12:45 மணியளவில் டவரில் இருந்து கீழே இறங்கினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து போலீசார் மேலும், விசாரணை நடத்தி வருகின்றனர்.