ஏ.கே.டி., மாணவர் பிரதிநிதிகள் எம்.எல்.ஏ.,விடம் வாழ்த்து
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளிகளில் மாணவர்கள் பிரதிநிதிகள் தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்கள் எம்.எல்.ஏ.,வை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளிகளில் 2026–27ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் பிரதிநிதிகளுக்கான தேர்தல் நடந்தது. இதில் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பல்வேறு பொறுப்புகளுக்கு போட்டியிட்டனர். இரு முறைகளில் நடந்த தேர்தலில் பள்ளி மாணவர்கள் நேரடியாகவும், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் இணையவழி மூலமாக வாக்குகளை பதிவு செய்தனர். தேர்தலில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓட்டளித்தனர். நேரடி மற்றும் இணையவழி வாக்குகள் அடிப்படையில் அதிக ஓட்டுகள் பெற்ற மாணவர்கள், மாணவர் பிரநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற ஏ.கே.டி., பள்ளி மாணவர்கள் பிரதிநிதிகள், கள்ளக்குறிச்சி அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ.,வை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, மாணவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணாதுரை ஆகியோரது வாழ்க்கை வரலாறு மற்றும் சிந்தனைகள் எடுத்துரைக்கும் நுால்களை பரிசாக வழங்கினார். ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், பள்ளி முதல்வர் வெங்கட்ரமணன், பத்தாம் வகுப்பு பிரிவு முதல்வர் செல்வகுமார் உடனிருந்தனர்.