உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கலை-அறிவியல் கல்லுாரியில் தமிழக அரசின் 'நான் முதல்வன்' 'உயர்வுக்குப்படி' எனும் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.முகாமில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கலை - அறிவியல் கல்லுாரிகள், தொழிற்பயிற்சி கல்லுாரிகள் அரங்குகள் அமைத்து கல்வி உதவித் தொகையுடன் படிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இதனைப் பெற்றோர்கள் பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளை உயர்கல்வியில் சேர்க்க வேண்டும். அரசு சார்பில், தமிழ் புதல்வன், புதுமைப் பெண், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.பெண்கள், மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு முகாமில் ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வி மட்டுமின்றி பல்வேறு குறுகிய கால தொழிற் கல்விகளும் வழங்கப்பட்டு வருகிறது.அத்துடன் அரசு சார்பில் மாணவர்களுக்கென செயல்படுத்தப்படும் திட்டங்கள், அவற்றை பெறும் வழிமுறைகள், அவற்றிற்கு தேவையான ஆவணங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்வது தான் இம்முகாமின் நோக்கம் ஆகும்.முகாமினை பயன்படுத்திக் கொண்டு உயர்கல்வியில் இதுவரை சேராமல் இருக்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் குறுகிய கால தொழிற் பயிற்சியிலாவது சேர்ந்து பயன்பெற வேண்டுமென, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் திறன்மேம்பாட்டுக் கழக உதவி இயக்குநர் நடராஜன், சி.இ.ஓ., முருகன், ஆர்.டி.ஓ., லுார்துசாமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.