தியாகதுருகம் நகருக்குள் அரசு பஸ்கள் நின்று செல்ல அதிகாரி அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி: 'தினமலர்' செய்தி எதிரொலியாக, தியாகதுருகம் நகர பகுதிக்குள் அரசு பஸ்கள் செல்லவும், சங்கராபுரத்தில் தாமதமின்றி பஸ்களை இயக்க போக்குவரத்து கழக பொது மேலாளர் அறிவுறுத்தியுள்ளார்.தியாகதுருகம் நகர பகுதி வழியாக சென்னை, சேலம், புதுச்சேரி, திருச்சி ஆகிய பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. சமீப காலமாக அரசு பஸ்கள் தியாகதுருகம் நகருக்குள் செல்லாமல் புறவழிச்சாலையில் நேரடியாக சென்றது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள், குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.அதேபோல், கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் மார்க்கமாக இயக்கப்படும் பெரும்பாலான அரசு பஸ்கள் மேல்நிலைப்பள்ளி பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. சரியான நேரத்திற்கு பஸ்கள் இயக்காததால் ஆசிரியர்கள், மாணவர்கள் தனியார் பஸ்சில் பயணித்தனர். இப்பிரச்னைகள் குறித்து சில தினங்களுக்கு முன் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இதன் எதிரொலியாக, விழுப்புரம் மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளர், கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் கிளை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், புறநகர பஸ்கள் அனைத்தும் தியாகதுருகம் நகர பகுதிக் குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும். கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் செல்லும் நகர வழித்தடம் மற்றும் சாதாரண புறநகர வழித்தட அரசு பஸ்கள் அனைத்தும் அரசு மேல்நிலைப்பள்ளி பஸ் நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.