விவசாய தொழிலாளர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மாரியப்பன், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், வட்ட செயலாளர் ஏழுமலை, பொருளாளர் பழனி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். நுாறு நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு 3 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும். விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு பண்டிகை காலங்களில் போனஸ் தொகை வழங்க வேண்டும். மாவட்டத்தில் நுாறு நாள் வேலை திட்டத்தில் ஜாப் கார்டு வைத்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தினர். இதில், மாவட்ட நிர்வாகிகள் வேல்முருகன், முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.