மதியனுார் ஏரி புனரமைப்பு பணி மத்திய நீர் ஆணையக் குழு ஆய்வு
உளுந்துார்பேட்டை, : மதியனுார் ஏரி புனரமைப்பு பணியை மத்திய நீர் ஆணையக் குழு அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். உளுந்துார்பேட்டை பகுதியில் பொதுப்பணித்துறை நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. மத்திய அரசு 75 சதவீத நிதியும், மாநில அரசின் 25 சதவீத நிதி உதவியுடன், ஏரிகள் பழுதுபார்த்தல், புதுப்பித்தல் பணிகள் நடந்து வருகிறது.அதன்படி, உளுந்துார்பேட்டை பகுதியில் உ.செல்லுாரி ஏரி ரூ. 50.92 லட்சம் மதிப்பிலும், மட்டிகை ஏரி ரூ. 1.16 கோடி மதிப்பிலும், மதியனுார் ஏரி ரூ. 68.74 லட்சம் மதிப்பிலும், மணலுார் ஏரி ரூ. 94.14 லட்சம் மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. மதியனுார் ஏரியில் நடக்கும் புனரமைப்பு பணிகளை மத்திய நீர் ஆணைய குழு இயக்குனர் அசோகன் மற்றும் துணை இயக்குனர் அஷரப்பாஷா நேற்று ஆய்வு செய்தனர். அப்பகுதி விவசாயிகளிடம், இந்த ஏரி மூலம் பயன் பெறுகிறீர்களா, உங்களது தேவை என்ன என விசாரித்த மத்திய குழுவினர், பாசன சங்கம் மூலம் ஏரி மற்றும் வரத்து வாய்க்காலை பராமரிக்குமாறு அறிவுறுத்தினர். பின்னர் பொதுப்பணிதுறை அதிகாரிகளிடம் ஏரிகள் புனரமைப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தனர். விருத்தாசலம் செயற்பொறியாளர் பாலமுருகன், கள்ளக்குறிச்சி உதவி செயற்பொறியாளர் பார்த்திபன், உளுந்துார்பேட்டை உதவி பொறியாளர் பூங்கொடி, விவசாயிகள் உடன் இருந்தனர்.