மனுக்கள் மீது நடவடிக்கை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 399 மனுக்கள் பெறப்பட்டன. கலெக்டர் பிரசாந்த் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், பட்டா மாற்றம், நில அளவை, இலவச வீட்டு மனை, மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவி தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவி, சாலை வசதி, தெரு மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, வங்கி கடன் உதவி, ஆக்கிரமிப்பு அகற்றம், நீர்நிலை துார்வாருதல் உட்பட அனைத்து துறை சார்ந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடமிருந்து 379 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 20 மனு என மொத்தமாக 399 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உடனடி தீர்வு காண சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் சுமதி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.