இடம் பெயர்ந்தால்தான் முன்னேற்றம் கிடைக்கும் பணி ஆணை பெற்றவர்களுக்கு கலெக்டர் அட்வைஸ்
ரிஷிவந்தியம்: அரியலுாரில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 429 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.வாணாபுரம் அடுத்த அரியலுாரில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் வரவேற்றார்.வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குநர் லதா திட்ட விளக்க உரையாற்றினார். முகாமிற்கு வந்த 1,315 பெண்கள் உட்பட 2,417 நபர்களிடம் 103 தனியார் துறை நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் நேர்க்காணல் நடத்தினர். இதில், 5 மாற்றுத்திறனாளிகள் உட்பட 429 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில், 'வேலை தேடுபவர்கள் ஊதியத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல், கிடைக்கும் வேலையை பார்க்க வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் அனுபவம் பள்ளி, கல்லுாரி படிப்பை விட மதிப்பற்றது.படித்து முடித்ததற்கும், வேலைக்கு செல்வதற்கும் அதிக இடைவெளி இருக்கக் கூடாது. மாறிக்கொண்டே இருக்கும் உலகில் நாம் மாறாவிட்டால் பயணிக்க முடியாது. தற்போது உங்களை தேர்வு செய்துள்ள நிறுவனம் உங்களது ஊருக்கு அருகில் இல்லை என சேராமல் இருக்காதீர்கள். தயக்கமின்றி வெளிப்பகுதிக்கு செல்லுங்கள். இடம் பெயர்தல் தான் முன்னேற்றம் அளிக்கும்' என்றார்.தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.ஒன்றிய சேர்மன்கள் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், சத்தியமூர்த்தி, தாமோதரன், துணைச் சேர்மன் சென்னம்மாள் அண்ணாதுரை, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் துரைமுருகன், பெருமாள், பாரதிதாசன், அசோக்குமார், ஊராட்சி தலைவர் வசந்தகுமாரி லிங்கநாதன், பொதுக்குழு உறுப்பினர் ராஜி உட்பட பலர் பங்கேற்றனர்.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன் நன்றி கூறினார்.