புதிய மகளிர் குழுக்கள் கலெக்டர் அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் புதிய மகளிர் குழுக்களை உருவாக்க பெண்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தி உள்ளார். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.அவர், மாவட்டத்திலுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்கள், புதிய குழுக்கள் உருவாக்கம், செயல்பாடுகள், தொழில் விவரம், கடனுதவி செயல்பாடுகள், முன்னேற்றம் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து வட்டார வாரியாக கேட்டறிந்து ஆய்வு செய்தார். இது குறித்து அவர் பேசுகையில், 'கிராமப்புற மகளிர் முன்னேற்றத்தில் சுய உதவிக் குழுக்களின் பங்கு முக்கியமானது. அதனால் சுய உதவிக் குழுக் கடன்களை மகளிர் உரிய முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். மேலும் செயல்பாடுகளை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் புதிய குழுக்களை உருவாக்க பெண்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,' என்றார். மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.