கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவு சங்க செயலாளர்கள், கள அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். துணைப்பதிவாளர் சுகந்தலதா, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தவணை தவறிய கடன்கள் மற்றும் வசூல் விபரங்கள், சிறப்பு கடன் தீர்வு திட்டம், நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், முதல்வர் மருந்தகங்களில் வாங்கப்பட்ட மருந்துகள் விபரம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்சேவை மையங்களாக மாற்றுதல், ஊதிய நிர்ணயம், கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள கணக்குகளை கணினி மயமாக்குதல், சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.கூட்டத்தில் அலுவலக கண்காணிப்பாளர் சசிகலா, கூட்டுறவு ஒன்றியத்தின் மாவட்ட செயலாட்சியர் நிர்மல், கூட்டுறவு சங்க செயலாளர்கள், கள அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.